Sunday 10 August 2014

வாய் விட்டுச் சிரித்ததால் வந்ததே பரிசு......!!

திரு வை. கோபு  ஸார் அவர்களின் 28ம் கதைக்கான இணைப்பு.

  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-28.html

அதற்கான என் விமரிசனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்ததற்கான  இணைப்பு...

 http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-03-03-third-prize-winner.html



வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! நம் கோபு ஸாரின் கதைகளைப் படித்தாலோ சிரித்து, சிரித்து எந்த நோயும் நம் அருகிலேயே வராது!

வித்யாசமான, வேடிக்கையான நடைமுறைகளைக் கொண்ட ஒரு மருத்துவ மனையைப் பற்றிய நகைச்சுவை கதை! படிக்கும்போது 'அட...இப்படியும் ஒரு ஆஸ்பத்திரியா' என்ற எண்ணம் தோன்றினாலும், கதையின் சுவாரசியத்தில் முழுக் கதையையும் படித்து முடித்து விடும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை! அதுதான் கதாசிரியரின் ஸ்பெஷாலிட்டி!

முன்கோபி கதாநாயகனுக்கேற்ற பொருத்தமான பெயர் கோபி! சலிப்பு, கொதிப்பு, கடுப்பு, கோபம், எரிச்சல் (ஆசிரியர் எழுதியுள்ள {எரிச்சல்} இந்த அனுபவம் ஆண்கள் மட்டுமே அறிந்தது!) இவற்றை பிறவியிலேயே பெற்றதுடன் யாராலும் விரும்பப் படாதவனாக இருந்தவனுக்கு சிரிப்பும் 'பை...பை..'சொல்லி விட்டது போலும்!

பாவம்...ஏற்கெனவே கடுகடு, சிடுசிடு கோபியின் எரிச்சலை ஒரு குட்டியூண்டு  கல் இடறி ரத்தக்காயம் வேறு! அவன் முகத்தை கற்பனை செய்யவே முடியவில்லை! 

மருத்துவமனை நர்ஸ்களை வெள்ளைப் புறாக்களாக கற்பனை செய்யும் ஆசிரியரின் ரசனையை என்ன சொல்ல! இது போன்ற உவமைகள் கதைக்கு சுவாரசியம் கூட்டும் 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்'!

அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றவனை சட்டை, பனியனை அவிழ்க்கச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், ஏன் அப்படி என்ற கேள்வி கதையை மேலும் படிக்கத் தூண்டுகிறது.

அந்த மருத்துவமனையில் அதுதான் சட்டம் என்று கொரியர்காரர் சொன்னபோது 'இது ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ' என்ற சந்தேகம் ஏற்படுகிறது! 

காலில் அடிபட்ட காயத்தைப்பற்றிக் கவலைப்படாமல், கண்ட டெஸ்ட்டுகளையும் எடுப்பதுதான் இங்கு சட்டம் என்பது கோபியைவிட நமக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது!

வரும் நோயாளிகளை இந்த சட்டங்களைச்சொல்லி அல்லல் படுத்துவது அளவில்லாத ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கொரியர்காரரும் தினமும் இது போன்ற டெஸ்ட்டுகள் முடிந்த பின்பே டாக்டரைப் பார்க்க முடியும் என்பது வலியை மறந்து சிரித்த கோபியைப் போலவே நம்மையும் வாய்விட்டு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!! இவை கதைக்கு ஆசிரியர் கொடுத்த 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்'!

எப்படியோ சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாத, சிடுசிடு கடுகடு கோபியையும் சிரிக்க வைத்த பெருமை அந்த நகரின் பிரபல ஆஸ்பத்திரிக்கு கிடைத்து விட்டது! அதில் கதாசிரியருக்கும் பங்கு உண்டே!!

இது பல்துறை மருத்துவமனை மட்டுமல்ல, (ஆண்)பால் துறை.... ஆண்களுக்கு மட்டுமான ஆஸ்பத்திரி போலும்! பெண்களுக்கு இந்த விதிமுறைகள் சரிவராதே!! 

பலவிதமான பதுப்புது மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போட்டதுடன், வேலைக்கும் பலரை வைத்து, ஷகரில் அதிகபட்ச வாடகையையும் கொடுத்து ஆஸ்பத்திரி நடத்துபவர்களின் ஒரே இலக்கு அப்பாவி மக்களாகிய நாம்தானே?!

நகரின் சிறந்த ஆஸ்பத்திரி என்று வந்து விட்டு அவர்களின் முட்டாள்தனமான விதிமுறைகளைக் கேட்டு, அதனால் ஆத்திரம், கோபம், எரிச்சல் ஏற்பட்டு, அவர்கள் டெஸ்ட் எடுக்கும்போது ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன், ஷுகர்.... இன்னும் பெயர் தெரியாத வியாதிகள் வந்து அந்த மருத்துவமனையின் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதே அவர்களின் குறிக்கோள் போலும்! பேஷண்டுகளை அதிகரிக்க ஒரு நல்ல ஐடியா! 

இந்த விஷயத்தை 'கிரிஸ்டல் க்ளியராக' எடுத்துச் சொல்கிறார் நம் ரைட்டர்!

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் நல்ல உடல்நலத்துடன் மிக ஆக்டிவ்வாக இருந்தார். ஜெனரல் செக்கப்பிற்காக பலரும் பரிந்துரைத்த ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் செய்த பரிசோதனையில், உங்கள் கர்ப்பப்பையில் பிரச்னை... உடனே நீக்க வேண்டும் என்று சொல்ல, பயந்து போய் ஆப்பரேஷன் செய்து கொண்டார். அது முதல் பல பிரச்னைகள். தையல் சரியில்லை, உள்ளே புண் ஆகி விட்டது, மீண்டும் தையல் என்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை, மன உளைச்சல், பணச்செலவு....'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக' நன்றாக இருந்த உடம்பைக்கெடுத்துக்கொண்டு விட்டேனே என்று வருத்தப் படுகிறார்.

இந்தக் காலத்தில் டாக்டர்களையும் நம்ப முடிவதில்லை.... நல்ல மருத்துவமனை எது என்று தீர்மானிக்கவும் முடிவதில்லை.

ஒன்றுமில்லாத நோய்க்கெல்லாம் இக்காலத்தில் எப்படி விரிவான(!) மருத்துவம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது போல் மிக அழகாக ஆசிரியர் அவருக்கே உரிய நகைச்சுவையுடன், அங்கங்கே ரசனையான வர்ணனைகளுடன், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பதைப்போல் எழுதியுள்ள இக்கதையின் முடிவை நம்மிடமே விட்டு நம்மையும் 'ஜட்ஜ்' ஆக்கி விட்டார்!!

என்னைப்பொறுத்தவரை கதாநாயகன் கோபி தன் கால்வலியையும் பொறுத்துக் கொண்டு, 'விட்டேன் பிழைத்தேன்' என்று வேறு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருப்பான்!!




No comments:

Post a Comment