Monday 13 April 2015

மன்மத ஆண்டே வருக...!!!

 

சித்திரையில் துவங்கும் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆதவன் மேஷ  ராசியில் பிரவேசிக்கிறார். அது முதல் நமக்கு வசந்த காலம் ஆரம்பமாகிறது. வசந்தம் என்றால் மகிழ்ச்சி! புது வாழ்வின் தொடக்கம்! மன்மதனின் ஆட்சி ஆரம்பித்து, காதலர்கள் களிக்கும் காலம்!  எங்கு நோக்கினும் பசுமை! மாமரங்கள் புதுத் தளிரையும், வேப்ப மரங்கள் கொத்து கொத்தாக புது மலர்களையும் தாங்கி நிற்கும்!

தமிழ் ஆண்டுகள் அறுபது. இவற்றின் பெயர்கள் எப்படி ஏற்பட்டன? அப்பெயர்களின் காரணம் என்ன? இவற்றை அறிவோமா? மனிதனின் வயது அந்நாளில் 120 ஆக இருந்தது. 120 ஆண்டுகள் வாழ்பவர் எல்லா (ஒன்பது) தசைகளையும் பார்க்க முடியும். வருடங்களை அறுபதாக வைத்த காரணம், மனிதன் இரண்டு வட்டங்கள் வாழ வேண்டும் என்பதற்கே.

பிறப்பு, இறப்பில் சிக்கி, மாயையில் வாழும் மனிதருக்கு நல்லது, கெட்டது  எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, ஆண்டுகளுக்கு நல்ல, கெட்ட பெயர்களை வைத்தனர் நம் முன்னோர். பிரபவ என்பது புகழையும், விபவ என்பது அந்தஸ்தையும் குறிக்கும்.சுக்ல என்றால் வெண்மை. அதாவது தூய்மையான உள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாது என்பது கொடையைக் குறிக்கும். கர, துன்மதி, குரோதன, ராக்ஷச என்பது போன்ற அசுரப் பெயர்கள் நம்மிடமுள்ள காம, குரோத, லோப குணங்களைக் குறிக்கும்.

இவ்வருடங்கள் பிறந்தது எப்படி? நாரத புராணத்திற்கு செல்வோம். ஒருமுறை நாரதர் வைகுண்டம் சென்றபோது அருகில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டாள். நாரதருக்கு இது சுருக்கென்று இருந்தது.

"நாராயணா! நானோ மாயையை வென்ற ஜிதேந்திரியன். தேவி என்னைக் கண்டு உக்ள்ளே சென்றது ஏன்?"என்றார். 

"நாரதா! பிரம்மாவும், ருத்ரனும் கூட மாயையை வெற்றி பெற முடியாது.காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அக்காலமே மாயைக்கு உருவமாயிருக்கிறது." என்றார் நாராயணர்.

அம்மாயையைக் காண விரும்பிய நாரதரை பூலோகம் அழைத்து வந்த நாராயணர், அவரை ஒரு தடாகத்தில் ஸ்நானம் செய்யச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பகவான்! ஸ்நானம் செய்து கரையேறிய நாரதர் அழகிய ஒரு கன்னிப் பெண்ணாகக் காட்சியளித்தார். 

மாயையில் ஆட்பட்ட நாரதருக்கு தன்  பூர்வீக நினைவுகள் மறந்து, அங்கு வேட்டையாட வந்த காலத்வஜன் என்ற அரசரை மணந்து, 60 பிள்ளைகளைப் பெற்றார். மாயையின் வலையில் சிக்கியபோது அதில் வசப்பட்டதால், தனக்கு  பிறந்த பிள்ளைகளுக்கு பல குணங்களின் பெயர்களைச்  சூட்டினார் நாரதர். அவரின் 60 பிள்ளைகளே 60 வருடங்கள். அதனாலேயே பிரபவ முதல் அக்ஷய வரை உள்ள பெயர்கள் அனைத்தும் நம் வாழ்க்கை சம்பந்தப்பட்ட குணங்களின் பெயர்களே.


பண்டைத் தமிழர்கள்  ஆதாரமாகக் கொண்டே மாதங்களைக் கணித்தனர்.  அதனாலேயே மாதங்களுக்கு 'திங்கள்' என்ற பெயர் ஏற்பட்டது.அப்பெயர்கள் எப்படி ஏற்பட்டன? தமிழில் திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கும்.பன்னிரு திங்களின் பெயரும் தமிழ்ப் பெயர்களே. 


கடைசி மாதமான பங்குனிக்குப் பின்பு பனி முற்றும் போய் வானம் வெயிலால் பளிச்சென்று சித்திரம் போல் காணப்படுவதால் 'சித்திரை'.இம்மாதம் மக்கள், மாக்கள், செடிகொடிகள் தழைக்கும் இன்பமான மாதம்.

அடுத்த மாதம் வெய்யில் அதிகரித்து, செடிகொடிகள் வாடி காசநோயுற்றது போல காணப்படும். அதனால் 'வைகாசி' (வை என்பது வைக்கோல்,புல)என்பதைக் குறிக்கும். வைகாசம் என்பது வைகாசி ஆயிற்றாம்!

தை முதல் ஆனி  வரையான ஆறு மாதங்கள் தேவர்களுக்கு பகல் காலமாகும்.அப்பகலின் முடிவிற்கு எல்லை  மாதம் 'ஆனி'  (ஆனி -எல்லை) ஆயிற்று.சூரியன் வடக்கு  எல்லையை அடைந்து தெற்கு நோக்குவதால் 'தட்சிணாயனம்' எனப்படும்.

ஆதவன் திசை திரும்பும்போது உலகம் ஆட்டமுறும்.அனல் காற்று வீச ஆரம்பிக்கும். 'ஆடி' என்பதற்கு காற்று என்ற பொருள்.


வெப்பம் அதிகரித்து காற்று மேலேழும்பும்.மேகங்கள் வெண்மை நிறம் கொண்டு வேன்பசுக் கூட்டங்கள் அணிவகுத்து செல்வது போல வரிசையாக ஒன்றுடனொன்று இணைந்து செல்வதால், (ஆ-பசுக்கள்) அணியாகச்  செல்வதால் 'ஆவணி' ஆயிற்று.

வானில் வெயிலும், மாசும் புரண்டு அடித்து வானிலை மாறுபட்டு, வெயிலும், மழையும் சரியாக இல்லாத மந்த நிலை கொண்ட மாதம் 'புரட்டாசி' (புரட்டு - புரண்டு, அசி- வானம் ) புரட்டாசி எனப்பட்டது.

சூரிய வெப்பம் குறைந்து மக்களை பசி அணுகுவதால் 'ஐப்பசி' (ஐப்பசி..அணுகிய பசி) ஆயிற்று. 

கார் காலம் மயங்கத் தொடங்கவே (கார்...திகை-மயங்குவது) 'கார்த்திகை' ஆனது.

சூல்  கொண்ட மேகங்கள் மழை பொழிந்து மயக்கம் தெளிவதால் (மாரி -மழை, கழி-கழிவது) 'மார்கழி' என்றாயிற்று.

மழை நீங்கி ஆதவன் வெளிப்பட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு புதுத் தோற்றம் கொள்வது, புது நெல், புதுப்பானை இவற்றில் செய்யப்பட்டு சூரியனுக்குப் படைக்கப்படும் பொங்கல்... இவற்றால் சிறப்பு பெரும் இம்மாதம் 'தை' (தை-சிறப்பு) ஆகியது.

மழை நீங்கினாலும் வானம் மாசு படிந்திருக்கும் மாதம் மாசி எனப்பட்டது.

மார்கழி முதல் நான்கு மாதம் பனிக்காலமாதலால், பனி கூறுபடும் மாதம் (பங்கு-கூறுபடுவது ) 'பங்குனி' மாதம்.

இவ்வாறு பன்னிரண்டு தமிழ் மாதங்களும் பொருள் பொதிந்தவையே.

தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு. பஞ்சாங்கம் மூலம்தான் வாரம், நட்சத்திரம், லக்னம் , திதி, யோகம் ஆகிய ஐந்து அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வருடத்திற்குரிய பலன்களை புத்தாண்டு அன்று படித்து அறிந்து கொள்வதே பஞ்சாங்க படனம்.

வருடப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி செய்வது ஐதீகம்.வாழ்வில் சுகத்தை அனுபவிப்பது போலவே துக்கத்தையும் அனுபவிக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. 

இனிய மன்மத ஆண்டு நல்வாழ்த்துக்கள்!


1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete